

ராமேசுவரம்: இலங்கை மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள திமிங்கலம் உமிழ் நீரான ஆம்பர் கிரீஸை கடத்த முயன்ற 2 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.
திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ், உயர் ரக வாசனைத் திரவியங்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில மருந்துகள் தயாரிப்பதிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மிகவும் அரிதான இப்பொருளை ‘கடல் தங்கம்’ எனவும் அழைக்கின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின்போது மன்னாரில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு தமிழக பகுதிக்குக் கடத்துவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில், 67 கிலோ திமிங்கலம் ஆம்பர் கிரீஸை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். மேலும், இந்தக் கடத்தலில் தொடர்புடையோர் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலம் ஆம்பர் கிரீஸின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ- 7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.