

சென்னை: மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கியதாக பெண் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புளியந்தோப்பு போலீஸார் நேற்று முன்தினம் மதியம் பழைய ஆடுதொட்டி அருகே கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண் உட்பட 2 பேரை விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்களின் உடமைகளைச் சோதித்த போது, மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருள் வைத்திருந்த புளியந்தோப்பு, போகிப்பாளையத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் (30), புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஜெயந்தி (34) ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் பெரோஸ்கான் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி உள்ளிட்ட 5 குற்ற வழக்குகளும், ஜெயந்தி மீது ஒரு போதைப் பொருள் வழக்கு உள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.