

சென்னை: சிட்பண்ட் நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி செய்த வழக்கில் அந்நிறுவன இயக்குநர் உட்பட இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு (39).
இவர், 2019-ம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த சிட்பண்ட் நிறுவனம் ஒன்றில் ரூ.2.17 லட்சம் வரை செலுத்தியுள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த பின்னரும் டில்லிபாபு உட்பட சுமார் 70 பேருக்கு ரூ.2.4 கோடிக்கு மேல் பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. மேலும் அந்த நிறுவனம் மூடப்பட்டு அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகினர்.
இதனால் டில்லிபாபு உள்ளிட்ட பணம் கட்டி ஏமாந்தவர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்.8-ம் தேதி புகார் அளித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் சம்பந்தப்பட்ட சிட்பண்ட் நிறுவனம் சீட்டுப் பணம் திருப்பிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த ஆனந்தன் (48), என்பவரை கடந்த 28-ம் தேதி கோவையிலும், நிறுவனத்தின் கணக்கு மேலாளர் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரை நேற்று முன்தினம் சென்னையிலும் போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.