

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மகேந்திர நாகர். இவர் அதே ஊரைச் சேர்ந்த ராம்ஸ்வரூப் என்ற விவசாயியின் (40) நிலத்தைக் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார்.
இந்நிலையில், ராம்ஸ்வரூப் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது மகேந்திர நாகர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அடியாட்கள் ராம்ஸ்வரூப்பை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் நிலைகுலைந்து போயிருந்த ராம்ஸ்வரூப் மீது ‘தார்’ ஜீப்பை ஏற்றி உள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.