

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புடைய சொத்தை அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகரில் வசிப்பவர் தொழில் அதிபர் சுப்பிரமணி (55). இவர் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘மடிப்பாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் எனக்கு இருந்தது. அதை சிலர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்து விற்பனை செய்து விட்டனர். எனவே, இதில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, உதவி ஆணையர் காயத்ரி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இதில், நில உரிமையாளரான சுப்பிரமணி இறந்துவிட்டது போல் போலி ஆவணம் தயார் செய்ததோடு போலியான வாரிசு சான்றிதழ் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் சுப்பிரமணியின் நிலம் அபகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக கே.கே நகரைச் சேர்ந்த ராகேஷ் (36), மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (54) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தாய் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து, அதே போன்று போலியான ஆவணம் தயார் செய்து அதை அடிப்படையாக வைத்து மோசடியில் இறங்கியது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.