

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் செல்வ சேகரன் வீட்டில் இன்று காலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநராக பணிபுரிபவர் செல்வ சேகரன். இவர், திண்டுக்கல் சென்னமயநாயக்கன்பட்டியில் ஏழமலையான் நகரில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ளனர். இந்நிலையில் செல்வசேகரன் வசித்து வரும் சென்னம நாயக்கன்பட்டி ஏழுமலையான் நகரில் உள்ள வீட்டில் இன்று காலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா ரூபா ராணி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
செல்வசேகரன், 2015 முதல் 2022 வரை திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள செல்வசேகரன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை காலை 6:30 மணி முதல் 9:30 வரை 3 மணி நேரம் நடைபெற்றது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் செல்வ சேகரனின் திருநெல்வேலி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.