மாங்காடு: வீட்டின் பின்புறத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பூந்தமல்லி: மாங்காடு பகுதியில் வீட்டின் பின்புற பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, ஜனனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். தனியார் நிறுவன ஊழியரான இவரது மனைவி பிரியதர்ஷினி, சென்னை, அம்பத்தூரில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தையான பிரணிகா ஸ்ரீ நேற்று மாலை வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனது.

இதையடுத்து, பெற்றோர் குழந்தையை வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடினர். அப்போது குழந்தை பிரணிகா ஸ்ரீ, வீட்டின் பின்புற பகுதியில் உள்ள காலி நிலத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பெற்றோர் குழந்தையை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in