

திருப்பூர்: காங்கயத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சகோதரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் கலைவாணி (46). டெய்லர். இவரது கணவர் கார்த்தி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களது மகன்கள் மைத்ரேயன் (21). கரண் (12) மூத்த மகன் கல்லூரியில் படித்து வந்தார். இளைய மகன் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு தாய் மற்றும் மகன்கள் சென்னிமலையில் இருந்து பரஞ்சேர் வழியாக திட்டுப்பாறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மைத்ரேயன் வாகனத்தை ஓட்டிச்சென்றார். அப்போது, அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துகிராம்தாஸ் (27), திலீப்தாஸ் (31), பிகாஸ் மாலிக் (18) ஆகியோர் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
3 பேர் பலத்த காயம்... எதிர்பாராவிதமாக இரண்டு 2 சக்கர வாகனங்களுக்கும் நேருக்கு நேர் மோதின. இதில் 6 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே மைத்ரேயன், கரண் மற்றும் துகிராம்தாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.