திருவள்ளூரில் 4 நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது

திருவள்ளூரில் 4 நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி விவேகானந்த சுக்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வி.எம்.நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வீட்டில் வசித்த திருநின்றவூர் அடுத்த பாக்கத்தைச் சேர்ந்த அஜித் (26), கடம்பத்தூர் அடுத்த ஏகாட்டூரை சேர்ந்த முகமது காலிப் (21) ஆகிய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தி விசாரணையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வாடகைக்கு வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in