

சென்னை: சென்னை அடையாரை சேர்ந்த ஜெயக்குமார்(57) சென்னை குடிநீர் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சென்னை வெள்ளனூரை சேர்ந்த ஓட்டுநர் புண்ணிய கோட்டி(38), திருமுல்லைவாயலை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மஹா கணேஷ்(37) ஆகியோர் நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகமானார்கள்.
இவர்கள் இருவரும், பாலவாக்கம், பல்கலை நகரில் 2,400 சதுர அடி இடத்தை ரூ.2 கோடிக்கு என்னிடம் விற்றனர். இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர் சரவணவேல் என்பவர் என்னிடம் புகார் கூறிய பிறகுதான், ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் அந்த இடத்தை இருவரும் என்னிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஏமாற்றியது தெரியவந்தது. எனவே, புண்ணியகோட்டி, மஹா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 9-ம் தேதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரூ.2 கோடி மோசடி செய்தது உறுதியானதைத் தொடர்ந்து, புண்ணியகோட்டி, மஹா கணேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.