

சென்னை: மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பிளம்பரை, கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி (28). பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராஜதுரை (30). அன்பு கணபதிக்கும், ராஜதுரை மனைவிக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது ராஜதுரைக்கு தெரியவந்ததையடுத்து, இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக ராஜதுரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜதுரை மற்றும் அன்பு கணபதியின் குடும்பத்தினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
ஆனாலும், ஆத்திரம் அடங்காத ராஜதுரை, அனைத்து பிரச்சினைக்கும் அன்பு கணபதி தான் காரணம் என எண்ணி, அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அன்பு கணபதியை அழைத்து, ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நான் அனைத்தையும் மறந்துவிட்டேன். மது அருந்தலாம் வா’ என, அவரை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு பெருங்குடி ரயில் நிலையம் அருகே சென்றார்.
அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில்,‘என் மனைவி உடனா பேசுகிறாய்’ என கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்பு கணபதியை குத்திவிட்டு ராஜதுரை அங்கிருந்து தப்பி சென்றார். ரத்த காயங்களுடன் கிடந்த அன்பு கணபதியை அப்பகுதியாக வந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த துரைப்பாக்கம் போலீஸார், ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.