

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரியர் கல்வியியில் கல்லூரியில் பயிலும் மணிகண்டன் என் பவர், வேப்பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு 3 மாத பயிற்சிக்காக சென்றார். நேற்று முன்தினம் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட காலாண்டுத் தேர்வை கண்காணிக்கும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டார்.
அப்போது அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் 5 பேர், தேர்வு நடைபெறும் அறைக் கதவைத் தட்டி, மறுநாள் நடைபெற இருக்கும் கணித தேர்வுக்கான வினாத்தாளை முன்னரே தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், அறைக்கதவை மணிகண்டன் திறக்க மறுத்த நிலையில், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மாணவர்கள், பயிற்சி ஆசிரியரைத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள் 5 பேரையும் வேப்பூர் போலீஸார் நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.