போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 3 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 3 பேர் கைது
Updated on
1 min read

போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க சென்னையில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, எம்ஜிஆர் நகர் போலீஸார் நேற்று முன்தினம் எம்ஜி.ர் நகர், சூளைபள்ளம், அஞ்சுகம் தெரு, நேரு தெரு சந்திப்பில் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்த போலீஸார், அதை வைத்திருந்த எம்ஜிஆர் நகர் அபிஷேக் (21), தாம்பரம் ராம்குமார் (21), மாங்காடு சிவராஜ் (19) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in