இருவேறு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை!

இருவேறு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை!
Updated on
1 min read

இருவேறு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மூன்றரை வயது மகள் கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அந்த சிறுமியை பள்ளி முடித்து, பள்ளி வேனுக்கு தூக்கி கொண்டு வரும்போது வேன் ஓட்டுநரான பண்ருட்டியைச் சேர்ந்த 35 வயது இளைஞர், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பத்மா முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 1 லட்சத்தை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார்.

இதேபோல, வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் பெண் ஒருவர், தனது முதல் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டதால், முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன், அதே பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வளர்ப்பு தந்தையான அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக, அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீஸார் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவி்ட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in