

கோவை: கோவையில் பிரபல நகைக்கடை நிறுவனம் ரூ.51.17 கோடி மத்திய ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததை கண்டறிந்த அதிகாரிகள் அந்நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்தனர்.
இதுகுறித்து கோவை மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தின் முதன்மை ஆணையர் பங்கர்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரபல நகை தயாரிப்பு நிறுவனத்திற்கு உரிய ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் நகைகளை வழங்கியது தொடர்பாக கோவையில் உள்ள மொத்த மற்றும் சில்லறை நகை கடை விற்பனை நிறுவனங்களில் கடந்த 2025 மார்ச் 18-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை கோவை மத்திய ஜிஎஸ்டி ஆணையரக அலுவலக அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
ஆய்வின்போது அந்நிறுவனம் மூன்று வகையான கணினிகளை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஒன்று ஜிஎஸ்டி ரசீது வழங்குவது தொடர்பாக, இரண்டாவது ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் செயல்படுவது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பது, மற்றும் மூன்றாவது நகை உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டவை என கண்டறியப்பட்டது.
மொத்தம் 2,969 கிலோ தங்கம் தொடர்பான வணிக நடவடிக்கைகளில் இத்தகைய மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை நிறுவனத்தின் மீது ரூ 51.17 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (செப்டம்பர் 12) கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.