

சென்னை: கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென மாயமானதைக் கண்டு, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கோயம்பேடு பேருந்து பணிமனை கிளை மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் (K-11 CMBT) கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கோயம்பேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பேருந்தில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்ததில் திருடப்பட்ட பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனிடையே, நெல்லூர் காவலர்கள் உதவியுடன் ஆத்மகூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்தை மீட்ட கோயம்பேடு காவலர்கள், பேருந்தை திருடிச் சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஞான சஞ்சன் சாஹூ என்பவரையும் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட பேருந்துடன் சென்னை வந்த போலீஸார், கைது செய்த சாஹூவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.