

பழநி: பழநியில் சிறுவனை கடத்த வந்ததாக நினைத்து, 40 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவரை பிடித்து பொதுமக்கள் தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பழநி அருகேயுள்ள மயிலாடும்பாறை பகுதி யில் நேற்று காலை சந்தேகத்துக் கிடமான வகையில் 40 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார். அப்போது, அந்த வழியாக பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றார்.
சிறுவனின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், வடமாநிலத்தவர் ஒருவர் சிறுவனை கடத்த முயன்றதாக நினைத்து, அவரை பிடித்து வைத்து தாக்கினர். மேலும், இது குறித்து பழநி அடிவாரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்குசென்ற போலீஸார், வடமாநிலத்தவரை மீட்டு, பழநி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
பின்னர், அவரிடம் சோதனை செய்ததில், பையில் இருந்த அடையாள அட்டை மூலம் அவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கானு சர்க்கார் என்பது தெரிய வந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் அவரை காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பழநியில் சிறுவனை கையை பிடித்து இழுத்த வடமாநிலத்தை சேர்ந்தவர்.