

திருச்சி: திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் தாய், குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்(21). சென்னையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். தென்காசியில் ஆக.30-ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஜோசப் பங்கேற்றுவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் இருந்து காரில் புறப்பட்டு உள்ளார்.
அப்போது, ஜோசப்பின் நண்பர்களான ஆலங்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார்(37), அவரது மனைவி யசோதா(29), இவர்களது மகள் அனோனியா(2), மற்றொரு நண்பரான விஜயபாபு (31) ஆகியோரும் உடன் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில், திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த நெடுங்கூர் அருகே சென்றபோது, அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் பகுதியில் கார் பயங்கரமாக மோதியது.
இதில், யசோதா, அவரது மகள் அனோனியா, விஜயபாபு ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ஜோசப், செல்வகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த சிறுகனூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிஎஸ்பி தினேஷ்குமார், சிறுகனூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், கார் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் இந்த விபத்து நேரிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் பழுதாகி நின்ற பேருந்தின் பின்பக்கம் சிவப்பு விளக்கு எரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.