திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தியால் வெட்டி இளைஞரை கொன்ற கும்பல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் வைசாலி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமல் (28). இவர் நேற்று இரவு கடம்பத்தூர் பஜார் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர்கள் சிலர் ராஜ்கமலை பின் தொடர்ந்து சென்று நாட்டு வெடிகுண்டுகளை அவர் மீது வீசி உள்ளனர். ராஜ்கமல் இரண்டு இடங்களில் தப்பித்து வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று 3-வது இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

அப்போதும் தப்பிக்க முயற்சி செய்த ராஜ்கமலை மர்ம நம்பர்கள் ஓட, ஓட விரட்டி சென்று, மடக்கி தலை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். மேலும், ராஜ்கமலை வெட்ட வந்தவர்களை தடுக்க முயன்ற ஒருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்து, சம்பவ இடம் விரைந்த கடம்பத்தூர் போலீஸார், ராஜ்கமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜ்கமல் கொலைக்கு காரணம், நிலங்களை வாங்கி விற்பது காரணமாக ஏற்பட்ட முன் விரோதமா? அல்லது வேறு காரணமா? என, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in