

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவுக்காக நன்கொடை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, விசிக மாவட்ட துணை செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியார் துப்பாக்கி தொழிற் சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் உற்பத்தியாகும் துப்பாக்கி வகைகள் இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு மாநில காவல்துறைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
துப்பாக்கி தொழிற்சாலை.. இந்நிலையில், நுங்கம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளரான எஸ்.கே. குமார்(48), நேற்றுமுன்தினம் காலை தனியார் துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகத்திடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவுக்காக நன்கொடை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தொழிற் சாலை நிர்வாகம் சார்பில் நேற்றுமுன்தினம் மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், வழக்குப் பதிவு செய்து, எஸ்.கே.குமாரை மணவாளநகர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.