

சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் என்பவர் நடத்திய தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். அந்த மாணவியை ஜூடோ போட்டிக்காக நாமக்கல் அழைத்து சென்ற கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ், பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021-ம் ஆண்டு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கெபிராஜ் மீது பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கராத்தே மாஸ்டர் கெபிராஜை கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கை கடந்த 2022-ம் ஆண்டு முதல் சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி பத்மா, கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் பெயர், அவர் மீதான வழக்கு, தண்டனை விவரங்கள் குறித்து மட்டுமே செய்தி வெளியிட வேண்டும் என்றும், கெபிராஜின் குடும்பம், குடும்பப் பின்னணி, குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி பத்மா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.