

மேட்டூர்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மருத்துவ கழிவுகளை அழிக்கும் கிடங்களில் மாநகர காவல் துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 879.5 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இன்று அழிக்கப்பட்டன.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு அதிரடி நடவடிககைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் வருவதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, கடத்தல் காரர்களை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு சோதனையில் 879 கிலோ 500 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் அடுத்த கோணமேரி பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் தனியார் கிடங்கிற்கு இன்று கொண்டு வரப்பட்டு, அழிக்கப்பட்டன. அப்போது, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் கஞ்சா மூட்டைகள் இயந்திரங்களில் போடப்பட்டு எரிக்கப்பட்டது.
அப்போது, மாநகர தடவியல் துணை இயக்குநர் வடிவேல், மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் நந்தகுமார், கொங்கணாபுரம் ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
எடப்பாடி அருகே கொங்கணாபுரம் அடுத்த கோணமேரி பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் கிடங்களில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் எரித்து அழிக்கப்பட்டது.