கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கில் கைதான ராஜு பிஸ்வகர்மா 4 நாள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்

கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கில் கைதான ராஜு பிஸ்வகர்மா 4 நாள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்
Updated on
1 min read

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராஜு பிஸ்வகர்மா 4 நாள் போலீஸாரின் விசாரணைக்கு பிறகு இன்று திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம்,கும் மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, ஜூலை 12-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, தனிப்படையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையில் தாபா ஒன்றில் பணிபுரிந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்ற இளைஞரை ஜூலை 26-ம் தேதி கைது செய்தனர்.

கைதான ராஜு பிஸ்வகர்மா திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஷ்வரி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கு ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இச்சூழலில், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜு பிஸ்வகர்மாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ஜூலை 28-ம் தேதி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை ஜூலை 29-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த விசாரணைக்காக, புழல் மத்திய சிறையில் இருந்து, முகத்தை மூடியவாறு ராஜு பிஸ்வகர்மா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஷ்வரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீஸார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி உமா மகேஷ்வரி, ராஜு பிஸ்வகர்மாவை 4 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்மிடிப்பூண்டி பகுதிக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அவரை சம்பவம் நடந்த மாந்தோப்பு, பணி செய்த இடம், சம்பவத்தில் ஈடுபட்ட பின்பு தங்கியிருந்த இடம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிந்த நிலையில், போலீஸார் இன்று ராஜு பிஸ்வகர்மாவை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஷ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். பிறகு, அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in