

சென்னை: மும்பையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்து போதைக்காக, வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்ததாக, தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொடுங்கையூர் போலீஸார் நேற்று முன்தினம், கொடுங்கையூர், டி.எச்.ரோடு மற்றும் தொப்பை விநாயகர் கோயில் சந்திப்பு அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்த போது, அதில் 400 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அதை வைத்திருந்த கொடுங்கையூர் விக்னேஷ் என்ற விக்கி (25), அவரது தாய் மேனகா (42), கொருக்குப்பேட்டை தினகரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட விக்னேஷ் மும்பையிலிருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் அவரது தாய் மற்றும் தினகரனுடன் சேர்ந்து விற்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.