தவெக - பாமக நிர்வாகிகள் இடையே மோதல்: 11 பேர் மீது வழக்குப் பதிவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்தவர் விஜய் செல்வா (30). இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். உளுந்தூர்பேட்டை கார்நேஷன் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (33). இவர், பாமக நிர்வாகியாக உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்திக் கொள்வதில் முன்விரோதம் இருந்து வந்தது. இதன்தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு விஜய் செல்வா - பாலாஜி இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னை சத்யா நகரில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் விஜய் செல்வா தலைமையில் அக்கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலாஜியின் வீட்டின் முன்பு விஜய் செல்வாவும் அவரது கட்சியினரும் சென்றுள்ளனர். அப்போது விஜய் செல்வா தரப்புக்கும் பாலாஜி தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை போலீஸார், இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் உருட்டுக்கட்டை, கல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் விஜய் செல்வா, பாலாஜியின் சகோதரர் ராஜன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இரு தரப்பு மோதல் தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in