

மதுரை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அண்ணாமலை, மதுரை மேல அண்ணா தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமர், லட்சுமணன், ஆனையூர் சூர்யபிரகாஷ் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் குற்ற வழக்கில் சிக்கி கோவை சிறையில் இருந்தனர்.
அப்போது, அங்கிருந்த மதுரை நவீன் நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலம் பெங்களூருவில் உள்ள தினேஷ், மதுரை மேலவாசல் ஹரி, கரிமேடு காக்காமுட்டை கார்த்திக் ஆகியோருடனும் இவர்களுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.
தற்போது நவீன் நாகராஜ் பெங்களூரு சிறையில் இருக்கிறார். அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அண்ணாமலை உட்பட 4 பேர் தொடர்புகொண்டுள்ளனர். அவரது உதவியின்பேரில், பெங்களூரு தினேஷ் மூலமாக கஞ்சா, மெத்தம்பெட்டமைன் வாங்கி வந்து, மதுரையில் விற்றுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைனை வாங்கிக் கொண்டு, மதுரையில் விற்பதற்காக பேருந்தில் 4 பேர் வருவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையிலான போலீஸார், பாத்திமா கல்லூரி அருகே பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, பேருந்தில் பயணித்த அண்ணாமலை(25), லட்சுமணன் (21), ராமர் (21), சூர்யபிரகாஷ் (24) ஆகியோர் 25 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தம் பெட்டமைன் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரையும் கைது செய்தனர்.