

ராணிப்பேட்டை: பாணாவரத்தில் வீட்டின் அருகே விளையாடச் சென்ற அண்ணன் - தம்பி உட்பட 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் மேட்டுகுன்னத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மகன் புவனேஷ்வரன் (7). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கோபியின் மகன்கள் மோனி பிரசாத் (9), சுஜன் (7). மோனி பிரசாத் 5-வகுப்பும், சுஜன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று சிறுவர்கள் 3 பேரும் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள குட்டையில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகச் சிறுவர்கள் 3 பேரும் அடுத்தது நீரில் மூழ்கித் தத்தளித்தனர். இவர்களது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவர்கள் 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே மூவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற பாணாவரம் போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.