

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் இன்று (ஜூலை 13-ம் தேதி) ஏற்பட்ட தீ விபத்தில் தாயும், அவரது 7 வயது மகளும் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையார்பாளையம் லிங்கப்பன் ஒத்தவாடை தெரு பகுதியை சேர்ந்தவர் மோனசுந்தரம். நெசவு தொழில் செய்து வரும் இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும் கிருபாஷினி என்கிற 7-வயது உடை 3 வகுப்பு பயிலும் மகளும் உள்ளனர். மணிமேகலை தனது குழந்தையை குளிக்க வைக்க கேஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார்.
தண்ணீர் சுட்டதும் குழந்தை கிருபாஷினியை அழைத்துக் கொண்டு மணிமேகலை குளியல் அறைக்குச் சென்றுவிட்டார். அப்போது திடீரென்று சமையல் கேஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது வீடு முழுவதும் பரவியது. குளியல் அறையில் இருந்த மணிமேகலையும், 7 வயது குழந்தையும் வெளியில் வர முடியாமல் அலறி கூச்சலிட்டனர்.
இவர்கள் தீயில் சிக்கி படுகாயமைடந்தனர். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து நடந்த இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.