

பரங்கிப்பேட்டை செயின் பாவா தெருவைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். இவரது மனைவி பர்கத் நிஷா (48). இவர், பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி. முட்லூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு வந்த பர்கத் நிஷா, இரவு பணி முடிந்து, சுமார் 11 மணியளவில் அவரது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. அவரைத் தேடி அவரது கணவர் எதிர்திசையில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பரங்கிப்பேட்டை செல்லும் வழியில் உள்ள தனியார் சிமென்ட் ஒர்க்ஸ் அருகே தலையில் காயத்துடன் பர்கத் நிஷா உயிரிழந்து கிடந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பரங்கிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம் பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.