Published : 01 Jul 2025 07:33 PM
Last Updated : 01 Jul 2025 07:33 PM
சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் திருடப்பட்ட தனது செல்போனை சிறிது நேரத்தில் மீட்டுகொடுத்த காவலர்களை சைபர் க்ரைம் பெண் டிஎஸ்பி வெகுவாக பாராட்டியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், நேற்று இரவு 8 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு அமர்ந்தவாறு அலைகளை பார்த்துக் கொண்டிருந்தவார், தனது செல்போனை அருகிலேயே வைத்துள்ளார். சற்று நேரத்தில் அவரது அருகில் இருந்த அவருடைய விலை உயர்ந்த செல்போன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பதற்றத்துடன் அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்களிடம் மாயமான தனது செல்போன் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அடையார் காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிக்குமார், காவலர் சிவமணி ஆகியோர் கவனித்துள்ளனர். மேலும், டிஎஸ்பி என்பது தெரியாமல் நேரடியாக சென்று நடந்த விவரத்தைக் கேட்டறிந்த காவலர்கள், திருடப்பட்ட செல்போன் எண்ணுக்கு அழைத்த போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, அங்கு கடை வைத்திருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், தந்தையின் உதவியுடன் செல்போனை திருடிய சிறுவன் பிடித்து, அவரிடம் இருந்த செல்போனை மீட்டதுடன் சிறுவன் என்பதால் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
பின்னர் செல்போன் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்த போதுதான், அவர் சைபர் க்ரைம் டிஎஸ்பி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, செல்போனை மீட்டுக்கொடுத்த போலீஸார் இருவரையும் வெகுவாகப் பாராட்டிய டிஎஸ்பி, அவர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT