

அருப்புக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் மனைவி, 2 மகள்களை கொலை செய்த விவசாயி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேலு(45). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், ஓராண்டுக்கு முன்பு ஊர் திரும்பி, விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெயதுர்கா (8), ஜெயலட்சுமி (5).
மனைவியின் நடத்தையில் சுந்தரவேலுவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரமடைந்த சுந்தரவேலு அரிவாளால் பூங்கொடி, ஜெயதுர்கா, ஜெயலட்சுமி ஆகியோரை வெட்டிக் கொலை செய்தார். பின்னர், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சுந்தரவேலு சரணடைந்தார்.
போலீஸார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.