

மதுரையில் மனைவியை அடித்துக் கொன்று நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை கோரிப்பாளையம் அருகே வயல்காட்டுச்சாமி தெருவைச் சேர்ந்தவர் ராமரத்தினம். பிளம்பராக உள்ளார். இவரது மனைவி மீனலோசினி (61). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வேறு பகுதியில் வசிக்கின்றனர்.
ராமரத்தினத்துக்கும், மீனலோசினிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மீனலோசினி திடீரென உயிரிழந்தார். அவர் கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்துவிட்டதாக ராமரத்தினம் போலீஸாரிடம் தெரிவித்தார். மீனலோசினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தல்லாகுளம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் மீனலோசினி கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராமரத்தினத்திடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறில் மனைவியை அவர் கட்டையால் தாக்கியது தெரிய வந்தது. ராமரத்தினத்தை போலீஸார் கைது செய்தனர்.