

சென்னை: வங்கியில் ரூ.1.76 கோடி கையாடல் செய்த குற்றச்சாட்டில் தனியார் வங்கி விற்பனை மேலாளர், தனது தாயாருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் மண்டல மேலாளராக இருப்பவர் வெங்கடேசன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "அமைந்தகரையில் உள்ள எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக திருவொற்றியூர், கிழக்கு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேந்திர குமார் (34) என்பவர் இருந்தார்.
இவர், அவரது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே எழுபத்தி ஆறு லட்சத்து 9,172 வரை கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். எனவே, எங்களது வங்கியில் கடன் பெற்று வங்கிக்கும், பொது மக்கள் பணத்துக்கும் நஷ்டம் ஏற்படுத்தி பணம் கையாடல் செய்து சட்ட விரோதமாக சுயலாபம் அடைந்த மகேந்திர குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் விஜயலட்சுமி (54) ஆகியோர் மீது நவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க, காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மகேந்திரகுமார் அவரது தாயார் உடன் சேர்ந்து விற்பனை மேலாளர் பதவியை தவறாக பயன்படுத்தி வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் நேற்று (ஜூன் 7) கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.