

சென்னை: கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 19 வயதுடைய இளம் ஜோடி ஒன்று குடியேறியது. அவர்கள் இருவரும் தங்களுக்கு திருமணமாகிவிட்டதாகக் கூறி, ரூ.4 ஆயிரத்துக்கு வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிவரை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஐசிஎப் போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இளைஞர் தூக்கில் தொங்கியவாறும், அவருடன் இருந்த இளம் பெண் படுத்த நிலையில் வாய் மற்றும் கண்ணில் ரத்தம் வடிந்தவாறும் இறந்து கிடந்தனர்.
இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. போலீஸாரின் தொடர் விசாரணையில், ஒரே வீட்டில் இறந்து கிடந்த இருவரும் கல்லூரி மாணவ-மாணவி என்பதும், அவர்களது பெயர் ஆகாஷ் மற்றும் அபிநயா என்பதும், இருவரும் விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
காதலர்களான இவர்கள் இருவரும், கல்லூரி புராஜெக்ட் தொடர்பாக சென்னை செல்வதாகக் கூறி தனித்தனியாக சென்னை வந்து, பெரம்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளனர். இந்நிலையில்தான் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் தாக்கியுள்ளார். இதில் அபிநயா இறந்துள்ளார். இதனால் பயந்துபோன ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுற இருக்க இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று அவர்களது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் சென்னையில் மட்டும் அல்லாமல் விழுப்புரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.