Published : 04 Jun 2025 05:34 AM
Last Updated : 04 Jun 2025 05:34 AM
சேலம்: ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களைப் போலியாக பயன்படுத்தியும், வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடியும் இரிடியம், காப்பர் விற்பனையில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என ஏமாற்றியும் ரூ.45 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயார் செய்து பொதுமக்களிடம் பண மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் கென்னடி, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் புகார் அளித்தார்.
அதன் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு கடந்த மார்ச் 15-ம் தேதி சேலம் மாநகர ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்த நித்யானந்தம், சந்திரா, தருமபுரியைச் சேர்ந்த அன்புமணி, சேலத்தைச் சேர்ந்த முத்துசாமி, கேசவன், கிஷோர்குமார் ஆகியோர் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடி, போலி ஆவணங்கள், முத்திரைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மத்திய அரசுக்கு இரிடியம், காப்பர் விற்பனை செய்யப்பட்ட வகையில் பெறப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை விடுவிக்க ரிசர்வ் வங்கிக்கு சேவை கட்டணம் மற்றும் வங்கி உயர் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணம் செலுத்துவோருக்கு அதிக வட்டியுடன் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டு தொகை திரும்ப கிடைக்கும் என்றும் பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பி சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து ரூ.45 கோடிவரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த மே 28-ம் தேதி நித்யானந்தம், சந்திராவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக இருந்த அன்புமணி, முத்துசாமி, கேசவன், கிஷோர் குமார் ஆகியோரை கடந்த மாதம் 30-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இக்கும்பல் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலும், ஆந்திராவிலும் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த கும்பலால் ஏமாற்றப்பட்டு, பணத்தை இழந்த பொதுமக்கள் சேலம் மாநகர காவல் துறையில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT