Published : 02 Jun 2025 08:11 PM
Last Updated : 02 Jun 2025 08:11 PM
சென்னை: ‘ஆபரேஷன் ஹைட்ரா’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் ஜார்க்கண்ட், அசாம், டெல்லியைச் சேர்ந்த 7 பேர் கும்பலை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருமண தள மோசடி, போலீஸ் அதிகாரிகள் போல் மிரட்டி பணம் பறித்து மோசடி, வங்கி விபரங்களை திருடி மோசடி என பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதில், தொடர்புடையவர்களை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து வரும் நிலையில், மோசடிக்கு மூளையாக செயல்படுவர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய தமிழக சைபர் க்ரைம் போலீஸார் ‘ஆபரேஷன் ஹைட்ரா’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன்படி, அப்பிரிவு எஸ்.பி சஹானாஸ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கபட்டு ஒரே நேரத்தில் தனிப்படையினர் உத்தராகண்ட், ஜார்க்கண்ட், அசாம் மற்றும் டெல்லி விரைந்து சைபர் க்ரைம் மோசடி கும்பலைச் சேர்ந்த 7 பேரை அடுத்தடுத்து கைது செய்தன. பின்னர், அவர்க தமிழகம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது தாவூத் (21), முகமது வாசிம் ஆகிய இருவர் திருமண தள மற்றும் ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதேபோல், அதே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் குமார் (40) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிடேஷ்வர் பிஸ்வாஸ் என்ற ஹிட்டு (30), நிஹார் ரஞ்சன் நாத் (51) ஆகிய 3 பேர் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிபோல் போனில் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெற்று பண மோசடி செய்தனர்.
இதேபோல் டெல்லியைச் சேர்ந்த ப்ரீதி நிக்கோலஸ் (30), மே ஷக் (19) ஆகியோர் கல்வி உதவி பெற்றுத் தருவதாக பணம் பெற்று மோசடி செய்தது தெரியந்தது. பொது மக்கள் இதுபோன்று மோசடிகளில் சிக்கிய ஏமாறாமல் விழிப்புடன் இருக்கும்படி மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் அறிவுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT