திருப்பூர்: குடும்பப் பிரச்சினையால் 4 வயது குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பூர்: குடும்பப் பிரச்சினையால் 4 வயது குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Updated on
1 min read

திருப்பூர்: குடும்ப பிரச்சினையில் நான்கு வயது குழந்தையுடன் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை தாய் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் இன்று (ஜுன் 2) அதிகாலை 1.30 மணிக்கு, ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் குழந்தை மற்றும் பெண்ணின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தை சேர்ந்த ஐயப்பன் மனைவி விஜயலட்சுமி (26) அவருடைய மகன் யாதேஸ்வரன் (4) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் குடும்பப் பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயலட்சுமிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆனதால் திருப்பூர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண், குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in