

ஆவடி: கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள காந்தி நகர், பெருமாளடிபாதம் பகுதியை சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (35). இவர் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கைதானவர்களில் ஒருவரான செங்குன்றம் அடுத்த சோலை நகரை சேர்ந்த சுபாஷ் (32), பொன்னேரி நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் கடந்த 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, பொன்னேரி நீதிமன்றம், சுபாஷ் மீது பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. எனவே, ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தலின் பேரில், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையிலான தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த சுபாஷை கைது செய்தனர்.