Published : 12 May 2025 12:16 PM
Last Updated : 12 May 2025 12:16 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதைக் கண்டித்த தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், மகளை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி (49). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி, 21 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இவர்களில் 17 வயது மகள், தற்போது வெளியான பிளஸ் டூ தேர்வில் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிந்தார்.
இந்நிலையில், ரவி தனது வயல் பகுதியில் கட்டிவரும் வீட்டில் அவருடைய மனைவியும், மற்றொரு மகளும் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களுக்கு 17 வயது மகள், உணவு சமைத்து தந்தையிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
நேற்று (மே 11) சாப்பாடு வர தாமதமானதால், மனைவி ரவிக்கு போன் செய்துள்ளார். அவர் போன் எடுக்காத நிலையில், வீட்டுக்கு வந்து பார்த்த போது, இளைய மகள் இறந்து கிடந்துள்ளார். அருகிலேயே ரவி தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளனர். இதைக்கண்ட தாயும், மூத்த மகளும் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர். மேலும், ஆண்டிமடம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் மாவட்ட எஸ்பி, தீபக் சிவாச், விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் உயிரிழந்த சிறுமி கழுத்தில் கயிற்றால் இறுக்கிய காயங்கள் இருந்துள்ளன. இதனால், தந்தைக்கும் மகளுக்கு இடையே சண்டை நடத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி எப்போதும் செல்போன் பார்த்துக்கொண்டிருப்பதும், அதனை அவரது தந்தை கண்டிப்பதும் வழக்கம் என்பது தெரியவந்தது. அதேபோல், நேற்றைய தினம் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த தனது மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT