

சேலம்: மளிகைக் கடை நடத்தி வந்த முதிய தம்பதியைக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேலம் போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (60).
இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரனும், வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, வித்யா உயிரிழந்து கிடந்தார். பலத்த காயத்துடன் இருந்த பாஸ்கரனை போலீஸார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். முதல் கட்ட விசாரணையில் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொல்லப்பட்ட வித்யாவின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, துணை ஆணையர் சிவராமன் ஆகியோர் அங்கு சென்று, விசாரணை நடத்தினர். வித்யா அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
எனவே, இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலையான பாஸ்கரனின் மகன், அந்த வீட்டின் மாடியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. பகல் நேரத்தில், மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் சேலம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.