Published : 10 May 2025 06:27 AM
Last Updated : 10 May 2025 06:27 AM

திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் 40 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளி திருட்டு

சென்னை: வடபழனியில் திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் 10 கிலோ வெள்ளி, 40 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக வடபழனி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வடபழனி ராகவன் காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் திரைப்பட விநியோகஸ்தர் பிரேம் ஆனந்த். இவரது மகன் போஜராஜா. மும்பையில் வசித்து வருகிறார். பிரேம் ஆனந்த் இதய நோய் காரணமாக சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டை சுத்தம் செய்வதற்காக 10 நாட்களுக்கு ஒருமுறை பணியாளர்கள் மட்டும் அவரது வீட்டுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பணியாளர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்திருந்ததை கண்டு, வீட்டின் உரிமையாளர் பிரேம் ஆனந்துக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது மகன் போஜராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மும்பையிலிருந்து வடபழனியில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டிலிருந்த 10 கிலோ வெள்ளி, 40 பவுன் தங்க நகைகள், 2 குத்து விளக்குகள், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வட பழனி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x