

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசுப் பேருந்து மற்றும் பால் வாகனம் ஆகியவை நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு நேற்று அதிகாலை அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதேபோல, ஈரோட்டிலிருந்து காரைக்குடிக்கு ரஸ்தா வழியாக பால் வாகனம் வந்துகொண்டிருந்தது. காரைக்குடி தேனாற்று பாலம் அருகே வந்தபோது, இந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் பால் வாகனத்தில் வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (51), கூவனூத்து கர்ணன் (30), ஆத்தூர் முன்னிலைகோட்டை தமிழ்பாண்டியன் (27) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பயணிகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த பால் வாகன ஓட்டுநர் இளையான்குடி ரூபன் (22) மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துநர் திருச்சி செல்வேந்திர பிரசாத் (60) மற்றும் 9 பயணிகள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து காரைக்குடி தெற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆறுமுகம் என்பவரது மகளுக்கு வரும் 19-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.