Published : 06 May 2025 05:20 AM
Last Updated : 06 May 2025 05:20 AM
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற அவரது தாயும், கணவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (50). தொழிலாளி. இவரது மனைவி மகேஷ் (32). நேற்று காலை வீட்டின் அருகே ஜெயப்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டக் கிணற்றில் மகேஷ், அவரது தாய் ராசம்மாள் (55) இருவரும் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். அப்போது, கால் தவறி மகேஷ் கிணற்றுக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற ராசம்மாளும் கிணற்றுக்குள் குதித்தார்.
இதைப் பார்த்த மகேஷின் மகன் பிரதீப் (10) கூச்சலிட்டார். உடனே வீட்டிலிருந்து ஓடிவந்த ராஜா இருவரையும் காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். ராஜாவின் மனைவி மகேஷ் கிணற்றின் பக்கவாட்டு கற்களைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தார். நீச்சல் தெரியாததால் ராஜாவும் ராசம்மாளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இது பற்றி தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மகேஷை மீட்டனர். மேலும், கிணற்றில் மூழ்கிய ராஜா, ராசம்மாள் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT