

சென்னை: திருமண தரகர் என்று கூறி, வீட்டுக்கு வந்து நகை, செல்போனை திருடிக்கொண்டு தப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் மோகனா (54). இவரது கணவர் காலமாகிவிட்டார். 2 மகன்களும் மலேசியாவில் வேலை செய்கின்றனர்.
இதனால், மோகனா தனியாக வசிக்கிறார். மூத்த மகனுக்கு திருமண வயது ஆகிவிட்டதால், பெண் தேடி வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி காலை, பெண் ஒருவர் மோகனாவை செல்போனில் தொடர்பு கொண்டார். தனது பெயர் லட்சுமி என்றும், திருமண தரகர் என்றும் அறிமுகம் செய்து கொண்ட அவர், வரன் பார்ப்பது தொடர்பாக நேரில் பேச வேண்டும் என்று கூறி முகவரியை வாங்கிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் மோகனாவின் வீட்டுக்கு வந்த அந்த பெண், திருமண வரன் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். களைப்பாக இருப்பதால், அங்கேயே சற்று ஓய்வெடுப்பதாக கூறியுள்ளார். பின்னர், மோகனா எழுந்து பார்த்தபோது, அந்த பெண்ணை காணவில்லை. மோகனாவின் செல்போன், அவர் அணிந்திருந்த தங்க செயினும் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மோகனா புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோகனாவின் வீட்டில் லட்சுமி என்ற பெயரில் திருடியது செங்கல்பட்டு மாவட்டம் ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த பத்மாவதி (56) என்பது விசாரணையில் தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராயபுரம், கொருக்குப்பேட்டை காவல் நிலையங்களில் அவர் மீது ஏற்கெனவே இதுபோல தலா ஒரு குற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.