

சென்னை: இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தவர்களை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இருவரை பட்டினப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் கடந்த மாதம் 23-ம் தேதி மின்சாரம் இல்லாததால் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த முகமது அலி என்கிற முன்னா (36), சந்தோஷ்குமார் (31) ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர்.
மின்சாரம் இல்லாத நேரத்தில் எதற்கு இவ்வளவு வேகமாக வருகிறீர்கள்? என்று கேட்டு நாகராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னா, சந்தோஷ் குமார், நண்பர்கள் கண்ணன், சப்ரினுடன் சேர்ந்து நாகராஜை கட்டை, இரும்பு பைப்பால் தாக்கினர். பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி, மகன் மற்றும் எதிர் வீட்டை சேர்ந்த கந்தன் ஆகியோர் தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் இவர்களையும் சரமாரியாக தாக்கியது.
இதில் காயமடைந்த 5 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அளித்த புகாரின் அடிப்படையில், பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தாக்குதல் நடத்திய முன்னா, சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
கைதான 2 பேர் மீது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.