Published : 28 Apr 2025 06:20 AM
Last Updated : 28 Apr 2025 06:20 AM
சிவகங்கை: முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை அருகேயுள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் ( 27). திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.
ஒப்பந்ததாரரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் பிரவீன்குமார் தனது தோட்டத்துக்கு சென்றார். தோட்டத்தில் இருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.
சாலை மறியல்... பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே பிரவீன்குமார் உயிரிழந்தார். இதைக் கண்டித்தும், கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாமியார்பட்டியைச் சேர்ந்த இந்திராணி (50) என்பவர் மயங்கி விழுந்தார்.
அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த எஸ்.பி. ஆஷிஷ் ராவத், டிஎஸ்பி அமல அட்வின் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து, டிஎஸ்பி அமலஅட்வின் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, சாமியார்பட்டியைச் சேர்ந்த விக்கி என்ற கருணாகரன் (20), சிவகங்கை காளவாசல் பிரபாகரன் (19), திருப்பத்தூர் நரசிங்கபுரம் குரு (21) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள்கள், இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "சாமியார்பட்டியில் ஒரு வாரத்துக்கு முன்பு, ஒரு வழக்கு தொடர்பாக விக்கியின் தம்பியை போலீஸார் கைது செய்தனர். தனது சகோதரர் கைதுக்கு பிரவீன்குமார்தான் காரணம் என்று கருதிய விக்கி, தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொலைச் செய்துள்ளார்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT