

மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பு்ள இடத்தை அபகரித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு சபி முகமது தெருவை சேர்ந்தவர் சுந்தர் (68). இவருக்கு மடிப்பாக்கத்தில் 2,840 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை தி.நகரை சேர்ந்த ராணி (65) என்ற பெண் கிரையம் பெற்றது போல் போலியான கிரைய ஆவணம் பதிவு செய்து வைத்து, அவரது மகன் ரமேஷ் குமாருக்கு செட்டில் மென்ட் ஆவணம் பதிவு செய்து கொடுத்துள்ளதாகவும், அதன் மூலம் கந்தன் சாவடியை சேர்ந்த செல்வ நாக ராஜன் என்பவரு க்கு போலியான பொது அதிகாரம் பதிவு செய்து கொடுத்திருப்பதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுந்தர் கடந்த மாதம் 19-ம் தேதி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த தி.நகரை சேர்ந்த ராணி, அவரது மகன் ரமேஷ் குமார் (40), செல்வ நாக ராஜன் (57), துரைப்பாக்கம் சங்கர் (36) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலி ஆவணங்கள் மூலம் இவர்கள் அபகரித்த இடத்தின் மதிப்பு ரூ.2 கோடி என போலீஸார் தெரிவித்தனர்.