இபிஎஸ் குறித்த அவதூறு கருத்து: யூடியூபர் ஸ்ரீவித்யா ஆஜராக சைதை நீதிமன்றம் உத்தரவு

இபிஎஸ் குறித்த அவதூறு கருத்து: யூடியூபர் ஸ்ரீவித்யா ஆஜராக சைதை நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி குறித்தும், பாஜக தலைவர்கள் மற்றும் பிராமணர்கள் குறித்தும் யூடியூப் சேனல்கள் மூலம் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக யூடியூபர் ஸ்ரீவித்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான மனுவில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து யூடியூப் சேனல் பேட்டியில், ஸ்ரீவித்யா மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து, பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோக்களை நீக்கக் கோரி சைபர் குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பழனிசாமி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஸ்ரீவித்யா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சுல்தான் அரிபீன், ஏப்.26-ம் தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in