

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர்கள் அற்புதராஜ் (36), அகஸ்டின் பிரபு (26), மில்டன் ஜெயக்குமார் (32), ராபர்ட் (32), ஜான்கென்னடி (35), சின்னப்பன் (34). இவர்கள் 6 பேரும் புனித வெள்ளியை முன்னிட்டு ஆம்னி வேனில் கேரள மாநிலத்தில் உள்ள தோமையார் தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் சாலையில் இன்று ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம் வேடசந்தூர் அருகே அய்யனார் கோயில் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, ஆம்னி வேன் மீது மோதியது. இதில் வேன் நொறுங்கியது. இந்த விபத்தில் சின்னப்பன், அகஸ்டின் பிரபு ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனர். வேனுக்குள் சிக்கியவர்களை வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
பின்னர் படுகாயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராபர்ட் உயிரிழந்தார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.