

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கேரளாவைச் சேர்ந்தவர் உட்பட 11 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டிக்கான டிக்கெட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, ஐபிஎல் டிக்கெட்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில், தொடர்புடைய பட்டாபிராம் அரவிந்த் (24), ஆலந்தூர் ரூபேஷ் (24), ஆவடி விஷ்ணு (19), கொளத்தூர் சேது ரோஷன் (20), திருவல்லிக்கேணி சந்திரன் (52), அசோக்நகர் ஸ்ரீராம் (25), கும்மிடிப்பூண்டி அரவிந்த் (20), திருவொற்றியூர் சாலமன் (19), கேரள மாநிலத்தைச் சேர்ந்த வினித் (28), சேப்பாக்கம் கார்த்திக் (23), கோட்டூர் மணிகண்டன் (26) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் முகவர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கள்ள சந்தை மூலம் விற்பனை செய்யவைத்திருந்த 34 ஐபிஎல் டிக்கெட்டுகள் மற்றும் ரூ.30,600 பறிமுதல் செய்யப்பட்டது.